Thursday, 14 July 2016

காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு-விடுதலை இராசேந்திரன்



விடுதலை இராசேந்திரன், தாய்ப் பிரிவு: பெரியார் முழக்கம்
வெளியிடப்பட்டது: 02 அக்டோபர் 2009
காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளை மட்டும் இந்தியா பார்த்துக் கொள்ளும். படையெடுப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட பின் காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படி இறுதி முடிவெடுக்க ஒப்புக் கொண்ட இந்திய அரசின் அன்றைய பிரதமர் நேரு, 1947 நவம்பர் 2 அன்றைய வானொலி உரையில், “காஷ்மீரின் எதிர்காலம் இறுதியில் மக்களால் தீrமானிக்கப் பட வேண்டும் என்பதை நாங்கள் பிரகடனப்படுத்தியுள்ளோம். இது காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்ல. முழு உலகிற்கும் நாங்கள் கொடுத்துள்ள வாக்குறுதியாகும்என்றார்.
உதட்டளவில் இவ்வாறு பேசிய நேருவின் உள்ளடக்கிடக்கையோ வேறானது. 1947 செப். 27 இல் சர்தார் பட்டேலுக்கு தான் எழுதிய கடிதத்தில்ஷேக் அப்துல்லாவின் ஒத்துழைப்போடு இந்திய யூனியனுடன் காஷ் மீரை எவ்வளவு விரைவில் இணைக்க முடியுமோ அவ்வளவு விரைவில் இணைப்பதற்கு ஏற்ற வகையில் காரியங்கள் நடந்தாக வேண்டும்என்று குறிப்பிட்டிருந்தார். (காஷ்மீர் மீதான பாரதத்தின் யுத்தம் .23).
காஷ்மீர் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஜனவரி 3, 1948 தொடங்கி டிசம்பர் 2, 1957 வரை 11 தீர்மானங்கள் .நா.வில் மீண்டும் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 31.12.1948 இல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான போர் ஓய்வு ஒப்பந்தப்படி காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு - ஒரு தற்காலிக எல்லைக்கோடு வரையப் பட்டு, கட்டுப்பாடு எல்லைக்கோடு வரையப்பட்டது. (கி.வெங்கட்ராமன், கார்கில் போரும் காஷ்மீர் சிக்கலும் .7)
ஜம்மு காஷ்மீருக்கு முழு இறையாண்மை கோரிய ஷேக் அப்துல்லா, 1951 செப்டம்பரில் நடந்த தேர்தலில் வெற்றியடைந்ததன் பின்னரான தன் சட்டமன்ற உரையில் 1951 நவம்பர் 5 அன்று நான்கு கடமைகளை முன் வைத்தார்.
1.        காஷ்மீரின் எதிர்காலம் பற்றிச் சட்டமியற்றுவது.
2.        மன்னராட்சியின் எதிர்காலம் பற்றி முடிவு செய்வது.
3.        முன்னாள் நிலவுடமையாளர்களால் பறிமுதல் செய்யப்பட்ட தமது பாரம்பரிய உரிமையுள்ள நிலங்களுக்கு நட்ட ஈடு கோருவதைப் பற்றிப் பரிசீலிப்பது, இந்தியாவுடன் இணைவதைப் பற்றி முடிவு செய்வது.
தேர்தல் வெற்றியின் சுகம் காஷ்மீர் சிங்கமான ஷேக் அப்துல்லாவையும் விட்டு வைக்கவில்லை. இதன் பயனாகவே - இந்திய வரலாற்றில் அப்பட்டமாக காஷ்மீரிகளுக்கு துரோகமிழைக்கப்பட்டு, காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிராக 1955 ஜூலை 7 அன்று ஸ்ரீநகரில் இந்திய உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்தவல்லபபந்த். “காஷ்மீருடைய இணைப்பு என்பது ஒரு யதார்த்தம் ஆகிவிட்டது. இனி அதை மாற்ற முடியாது. ஏனெனில் அரசியல் நிர்ணய சபையில் உள்ள தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாக இந்தியாவுடன் இருப்பதென காஷ்மீர் மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றார்” (நுராணி. .ஜி. The Kashmir Question, P.69) பக்ஷிகுலாம் முகமது தலைமையில் இயங்கிய ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை 1956 நவம்பர் 17 அன்று இயற்றிய தீர்மானம் கீழ்வருமாறு கூறியது. ‘ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறது. இனிமேலும் இருக்கும்’.
ஆனால் இந்த அறிவிப்பை .நா. பாதுகாப்புக் கவுன்சில் நிராகரித்து 1957 ஜனவரி 24 அன்று இயற்றப்பட்ட தீர்மானம், ‘.நா. தீர்மானத்திற்கு இணங்க செய்யப்படாத இவ்வறிவிப்பு அதாவது கருத்து வாக்கெடுப்பின் வழி செய்யப்படாத இந்த முடிவு செல்லத் தக்கதல்லஎன்று கூறியது.
ஆனால் நேருவும் தன் குரலை வெளிப்படையாக மாற்றிக் கொண்டு, “காஷ்மீரானது அய்யத்திற்கிடமின்றி சட்டப்பூர்வமாகவும், வரலாற்றுப் பூர்வமாகவும், அரசியலமைப்புச் சட்ட மூலமாகவும் இந்தியாவின் ஒரு பகுதியேஎன்று 1957 ஜூலை நவம்பர் இந்தோ ஜப்பானிய இதழில் வந்த பேட்டியில் கூறினார். (காஷ்மீர் மீதான பாரதத்தின் யுத்தம் .68)
தேசிய மாநாட்டுக் கட்சியும், ஷேக் அப்துல்லாவினுடைய அரசும் காஷ்மீரின் சுதந்திரத்தை நோக்கி நகரத் தொடங்கிய நிலையில் 1953 ஆகஸ்ட் 8 இல் சேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். 1947க்குப் பின் இந்திய வரலாற்றில் முதன்முறையாக பொய் வாக்கு போட்டு சேக் அப்துல்லாவை தனிமைச் சிறையில் (10 ஆண்டுகள்) அடைத்ததன் மூலம் - எந்த விசாரணையும் இன்றி அரசியல் தலைவர்களை ஆண்டுக்கணக்கில் சிறை வைக்கும் நடைமுறையை ஆசிய ஜோதியான நேரு தொடங்கி வைத்தார்.
1957 பிப்ரவரி 10 வாக்கில் கீழ்க்கண்டவாறு நேரு பேசியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
இரண்டு அடிப்படைகளை ஏற்றுக் கொண்டால் .நா. உடனோ, பாகிஸ்தானுடனோ அல்லது எந்த நாட்டுடனானாலும் சரி, நான் பேசத் தயார். முதல் அடிப்படை, 1947 அக்டோபரில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகிவிட்டது என்பதாகும்.
இரண்டாவது அடிப்படை, பாகிஸ்தானின் நியாயமற்ற தன்னிச்சையான காஷ்மீரின் மீதான ஆக்கிரமிப்பாகும்.” (காஷ்மீர் மீதான பாரதத்தின் யுத்தம் .29) இதன் பின் .நா. பற்றிய பேச்சும் வெகுஜன வாக்கெடுப்பு என்ற உறுதி மொழியும் காணாமல் போயின.
1960களில் இருந்து சோவியத் இந்திய அரசியல் நட்பின் அடை யாளமாக காஷ்மீர் சிக்கல் பற்றி .நா. பாதுகாப்புக் குழுவில் எந்தத் தீர்மானமும் (வாக்கெடுப்பு உட்பட) வரவிடாமல் செய்தது சோவியத் யூனியன்.
இந்திய அரசு பல லட்சக்கணக்கானப் படையினரை காஷ்மீரில் நிறுத்தி அம்மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதச் செயலாக அடையாளப்படுத்தி, காஷ்மீர் மக்களை இராணுவ ஒடுக்கு முறைக்குள் வாழ நிர்ப்பந்தித்தது.
இந்திய அரசின், நேருவின் துரோகங்களினால் வஞ்சிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் அடைந்த துன்ப, துயரங்களின் எதிர்விளைவாகவே காஷ்மீரில் காலப்போக்கில் எண்ணற்ற போராளிக் குழுக்கள் உருவாயின.
காஷ்மீர் மக்களின் பேராதரவுடன் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது. அவ்வமைப்பின் நிறுவனர் மெக்பூல்ட் மீது, இந்திய அரசு கொலைக்குற்றம் சாட்டி பிப்ரவரி 11, 1984 அன்று தூக்கிலிட்டுக் கொன்றது.
காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, விடுதலை கோரும் அம்மக்களை நரவேட்டை நடத்தும் இந்தியப் படையினர் ஒரு பக்கமும், புதிய புதிய பெயரிலான இஸ்லாமிய விடுதலைக் குழுக்களின் ஆயுதப் போராட்டமுமாக காஷ்மீர் விவகாரம் இந்தியாவிற்குத் தீராதச் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
அந்த கட்டுரையின் தொடர்ச்சி கண்டெடுக்க முடியாமையால் தொடருவோம்...
வரலாற்று அநீதி
பள்ளத்தாக்கின் காசுமீர மக்களும், ஜம்முவின் டோக்ராக்களும் பழமையான மக்கள் ஆவர். அவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட பண்பாடும், மொழியும், வாழ்விடப் பகுதியும் கொண்டவர்கள் ஆவர். 1846 ஆங்கிலேய-சீக்கிய போருக்கு முன்னர் வரை அவர்கள் ரன்ஜித் சிங்கினுடைய பேரரசின் ஒர் அங்கமாக இருந்து வந்தனர். அதற்குப் பின்னர் அம்ரித்சர் ஒப்பந்தத்தின் கீழ் ஜம்மு காசுமீர மன்னராட்சி மாநிலத்தை ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கியது. அதில் அவர்களுடைய நம்பிக்கைக்குரிய அடியாட்களில் ஒருவனான குலாப் சிங் என்றழைக்கப்பட்ட ஒரு டோக்ரா அரசனை ஆட்சியாளராக அமர்த்தியது.
1947-இல் பிரிட்டனால் திணிக்கப்பட்ட வகுப்புவாத இந்தியப் பிரிவினையின் நிபந்தனைகளில் ஒன்று, ஜம்முகாசுமீர மன்னராட்சி மாநிலம் பாகிஸ்தான் அல்லது இந்தியாவுடன் இணைவதற்கோ அல்லது சுதந்திரமாக இருப்பதற்கோ தீர்மானிக்கும் உரிமையைப் பெற்றிருக்கும் என்பதாகும். நில சீர்திருத்தங்களுக்காகவும், அப்போதிருந்த அரி சிங் பேரரசனினுடைய ஒடுக்குமுறையான ஆட்சிக்கு எதிராகவும், மக்கள் பெரும் ஆர்பாட்டங்களில் திரண்டெழுந்தனர்.
ஜம்மு-காசுமீரத்தின் எதிர்காலம் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்னால், புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் காசுமீரத்தையொட்டி பகைமையைத் தூண்டிவிடுவதற்காக ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் சதித்திட்டமிடத் துவங்கினர். இந்தியப் படைகள் ஜம்முவை ஆக்கிரமித்தனர். மகாராஜாவுக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் சேர்ந்து கொள்வதற்காக, பாக்கிஸ்தானிலிருந்து பழங்குடி மக்கள் காசுமீரத்திற்குள் நுழைந்தனர். பின்னர், இந்தியப் படைகள் சிரிநகரில் நுழைந்தனர். பாகிஸ்தான் படைகள் காசுமீரத்தின் மேற்கு மாவட்டங்களைக் கைப்பற்றினர்.
பின்னர் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டால், தற்காலிகமாக இந்தியாவுடன் இணைந்து கொள்ளலாமென மகாராஜா அரி சிங்குக்கு லார்ட் மௌவுண்ட் பேட்டன் அக்டோபர் 25, 1947-இல் எழுதினார். மறு நாளே, அரி சிங் இந்தியாவுடன் இணைவதாக ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இந்தியப் படைகள் அதிகாரபூர்வமாக ஜம்மு காசுமீரின் ஒரு பகுதியைத் தம் கையிலெடுத்துக் கொண்டனர். இதுவே இந்தியா மேலாண்மை செய்துவரும் ஜம்மு-காசுமீரமாக ஆகியது.
1948 சனவரி 1 அன்று, காசுமீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் வலுக்கட்டாயமாகக் கைப்பற்றியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா முறையிட்டது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் 47 ஏற்றுக் கொள்ளப்பட்டது. இத் தீர்மானத்தின்படி, பாகிஸ்தான் தன்னுடைய எல்லா துருப்புக்களையும் பின்வாங்கிக் கொள்ள வேண்டும், இந்தியா அதனுடைய பெரும்பான்மையான துருப்புக்களை ஜம்மு-காசுமீரத்திலிருந்து பின்வாங்கிக் கொள்ள வேண்டும், இதன் மூலம் சுதந்திரமான, நடுநிலையான கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்கள் தங்களுடைய எதிர்காலத்தை அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஐநா வின் தீர்மானத்தைத் தொடர்ந்து, இந்தியாவோடு இணைவதென அரசனோடு கையெழுத்திட்ட உடன்படிக்கை தற்காலிகமானதெனவும், “நிலைமை அமைதியானவுடன்”, ஜம்மு-காசுமீரத்தில் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்துவதை இந்தியா உறுதி செய்யுமென பிரதமர் நேரு பலமுறையும் அறிவித்திருக்கிறார். சுயநிர்ணய உரிமையை மக்கள் பயன்படுத்துவார்களென அவர் வாக்குறுதியளித்தார். அதாவது, அவர்கள் இந்திய ஒன்றியத்தின் அங்கமாக இருக்க விரும்புகிறார்களா, அல்லது பாகிஸ்தானில் இணைய விரும்புகிறார்களா அல்லது தனியாக இருக்க விரும்புகிறார்களா என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள் என்றார். ஆனால் இந்த வாக்குறுதி, இன்றுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
ஒரு கருத்து வாக்கெடுப்பு நடைபெறும் வரை, ஜம்மு-காசுமீர் தற்காலிகமாக இந்திய ஒன்றியத்தில் இருக்கும் என்பதை குறிப்பிடும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் உறுப்பு 370 கொண்டு வரப்பட்டது. அதற்குஜம்மு-காசுமீர் மாநிலத்தின் தற்காலிக வழிவகைகள்என்று பெயரிடப்பட்டுள்ளது. அது, ஜம்மு-காசுமீர் ஒரு தனி அரசியல் சட்டம் வைத்துக் கொள்ள வழிவகை செய்தது.
ஜம்மு-காசுமீருக்கு ஒரு அரசியல் சட்டத்தை எழுதுவதற்காக ஒரு அரசியல் சட்ட நிர்ணய அவையைத் தேர்ந்தெடுப்பதற்காக 1951-இல் தேர்தல் நடத்தப்பட்டன. ஆனால், அந்த அவைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லை. ஏனெனில் அந்த அவையானது, இந்தியா நிர்வகிக்கும் காசுமீரப் பகுதியில் வாழும் மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். பாகிஸ்தான் நிர்வகிக்கும் காசுமீர மக்கள் அதில் பங்கேற்கவில்லை. அந்த மாநிலம், இந்தியாவுடன் இணைவதை பிரதிநிதித்துவமற்ற இந்த அரசியல் சட்ட நிர்ணய அவை அங்கீகரித்தது. அது, ஒரு அரசியல் சட்டத்தை ஒப்புக்கொண்டது. அச்சட்டம் சனவரி, 26, 1957-இல் நடைமுறைக்கு வந்தது. அது, “இந்திய ஒன்றியத்தின் ஒருங்கிணைந்த ஒரு அங்கமாக ஜம்மு-காசுமீர்இருக்குமென அறிவித்தது. அதிலிருந்து, இந்திய ஆட்சியாளர்கள், இது விவாதத்திற்கு உரியதல்ல என்றும், அதைக் கேள்வி கேட்பவர்களும், வாக்குறுதியளிக்கப்பட்ட கருத்து வாக்கெடுப்பு பற்றிக் குறிப்பிடுபவர்களும், தேச விரோதிகளெனவும், இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஒரு அச்சுறுத்தலெனவும் அறிவித்து வருகிறார்கள்.
காசுமீர் பற்றிய மோதலானது இந்த முக்கிய கேள்வியை ஒட்டியதாகும்ஒரு தேசம் அல்லது மக்களுடைய அரசியல் இலக்கைத் தீர்மானிப்பதற்கான உரிமை யாருக்கு இருக்கிறது? இறையாண்மையானது மக்களுக்கு உரியதா, அல்லது ஒரு பகுதி மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களை உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு தேர்ந்தெடுத்த அவையிடம் இறையாண்மை இருக்கிறதா? அன்னிய படைகள் பின்வாக்கப்பட்டு, இந்திய மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் மாநிலப் பகுதிகள் இரண்டிலும் வாக்குறுதி கொடுக்கப்பட்ட கருத்து வாக்கெடுப்பு நடைபெறும் வரை ஜம்மு-காசுமீர் மாநிலத்தின் தற்காலிக நிலையைப் பிரதிபலிக்கும் உறுப்பு 370-உடன் இது முரண்படவில்லையா?
தொடரும் மக்கள் பெருந்திரளுடைய அதிருப்தியும், காசுமீரத்தில் கிளர்ச்சியும், சுயநிர்ணய இறையாண்மை உரிமை காசுமீர மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் வரலாற்று அநீதியிலிருந்தும், எதிரெதிரான அண்டை நாடுகள் வலுக்கட்டாயமாக காசுமீரத்தைத் துண்டாடி வைத்திருக்கும் அநீதியிலிருந்தும் எழுகிறது.

No comments:

Post a Comment